கருட சேவை 
ஆன்மிகம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருடசேவை

உற்சவர் பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

தென்திருப்பேரை,

தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் 9வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கடந்த 19-ஆம் தேதி சித்திரை பிரம்மோற்சவம் துவங்கியது. ‌

விழாவின் 5ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூபம், 7.10 மணிக்கு நித்தியல், 8.30 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் மாடவீதி ரதவீதி புறப்பாடு நடந்தது. 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சாத்து முறையைத் தொடர்ந்து தீர்த்தம், சடாரி, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் மற்றும் நம்மாழ்வார் இருவரும் வாகன மண்டபம் எழுந்தருளினர். பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி இரவு 8.00 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி தந்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 27-ஆம் தேதி (27.4.2026) தேரோட்டம் நடைபெறுகிறது.