கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மலை மீது அமையப்பெற்ற சிவ தலங்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் இறைவன் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சந்திரசூடேஸ்வரரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் உடல் நோய்கள் நீங்கி, மன நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குடும்பம் சகல ஐஸ்வர்யத்துடன் இருப்பதற்கும் பக்தர்கள் ருத்ராபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இங்குள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுபவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்படுகிறது. இக்கோவிலில் மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பங்குனி தேர்த்திருவிழா போன்றவை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் நகரின் மத்தியிலேயே சந்திரசூடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.