அறுபத்து மூவர் திருக்காட்சி 
ஆன்மிகம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா

நாயன்​மார்​கள் முன்செல்ல, இறைவன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளி மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சென்னை,

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பங்குனிப் பெருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக கிராம தேவதை கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடும், இரவு நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் புறப்பாடும் நடந்தது. விழா நாட்களில், வெள்ளி பவழக்கால் வாகனத்தில் சாமி, அம்பாள் வீதி உலா, அம்பாள் மயில் வடிவில் சிவபூஜை காட்சியும், புன்னைமர வாகனம், கற்பகமர வாகனம், வேங்கைமர வாகனத்தில் வீதி உலா, வெள்ளி பூத வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று காலை 6.10 மணி அளவில் தேருக்கு சாமி எழுந்தருளல், 6.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து தேரில் இருந்து இறைவன் கோவிலுக்கு எழுந்தருளல், ஐந்திருமேனிகள் விழா நடந்தது.

இன்று காலை 9 மணிக்கு திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளல் மற்றும் என்பை பூம்பாவையாக்கி அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்​கிய நிகழ்​வான‘அறு​பத்து மூவர்’ விழா இன்று மாலை நடைபெற்றது.

63 நாயன்​மார்​களும் முன்செல்ல, இறைவன் கபாலீஸ்வரர் வெள்ளி விமானத்​தில் எழுந்தருளி மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் சென்னை மட்டுமின்றி வெளி மாவட்​டங்​களைச் சேர்ந்த ஏராள​மான பக்​தர்​கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அறுபத்து மூவர் விழாவைத் தொடர்ந்து இரவு பார்வேட்டைக்கு சந்திரசேகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறும்.

வருகிற 31-ந்தேதி ஐந்திருமேனிகள் விழாவும், ஏப்ரல் 1-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு பங்குனி விழா நிறைவு பெறுகிறது.