மூலக்குளம்
புதுச்சேரியில் லாரி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
மருந்து விற்பனை பிரதிநிதி
புதுவை உருவையாறு செல்வா நகரை சேர்ந்தவர் ஜெயசந்திரன். லாரி டிரைவர். இவரது மகன் பிரேம்குமார் (வயது 23), புதுவையில் உள்ள மருந்து கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.
தினமும் அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் புதுவையில் உள்ள கம்பெனிக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி, இன்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பிரேம்குமார் புறப்பட்டு புதுவை நோக்கி வந்தார்.
உடல் நசுங்கி பலி
புதுவை-விழுப்புரம் மெயின்ரோடு ரெட்டியார்பாளையம் பவள நகர் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி, பிரேம்குமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புதுவை வடக்குப்பகுதி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆம்புலன்ஸ் வரவில்லை
சாலை விபத்தில் உயிரிழந்த பிரேம்குமார் உடலை எடுத்துச்செல்ல சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.
இதனால் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் அந்த வழியாக வந்த தனியார் ஆம்புலன்சை நிறுத்தி உடலை ஏற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.