கல்வி&வேலைவாய்ப்பு

‘நீட்' தேர்வு கட்டணத்தை திரும்ப பெற அவகாசம் நீட்டிப்பு

நீட் பதிவு இணையதளத்தில் சென்று இந்த விவரங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

நீட் தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 23 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதி இருந்தனர். இந்த நிலையில் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக அந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. மறு தேர்வு வருகிற 21-ந்தேதி நடைபெற இருக்கிறது.

13 லட்சம் தேர்வர்கள்

ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட தேர்வின் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. அதன்படி, இதுவரை சுமார் 13 லட்சம் தேர்வர்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை புதுப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தெரிவித்திருக்கிறது.

மேலும் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை இன்னும் சமர்ப்பிக்காத தேர்வர்களுக்கு உதவும் வகையில், வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிப்பதற்கான வசதியை வருகிற 22-ந்தேதி வரை அவகாசத்தை நீட்டித்தும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. நீட் பதிவு இணையதளத்தில் சென்று இந்த விவரங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.