புதுடெல்லி,
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத தமிழகத்தில் 2 லட்சம் மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை(NTA) செய்து வருகிறது.
தேர்வுக்கான ஹால் டிக்கெட் 27-ந்தேதி(நாளை) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
உயிரை விட எதுவும் முக்கியம் இல்லை என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணரும் மாணவர்கள் 14416 அல்லது 1-800-891-4416 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொண்டு, பல மொழிகளில் ஆலோசனை பெறலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.