தேனி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் கடந்த ஆண்டு நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான குரூப்-2ஏ தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்று பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு செய்யும் நபர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையவழியில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
அதன்படி, தேனி மாவட்டத்தில் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் தங்களுக்கான தேர்வாணைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நாளை காலை 10 மணியளவில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு வரும் நபர்கள் தங்களின் தேர்வாணைய கடிதம், அனைத்து கல்வி சான்றுகளின் அசல் மற்றும் நகல் எடுத்து வர வேண்டும். இந்த தகவலை தேனி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.