2026-27-ம் கல்வியாண்டு முதல் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் நிலையான மற்றும் விருப்பத்தேர்வான மேம்பட்ட நிலைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் மும்மொழிக் கொள்கையில் புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, மாணவர்கள் படிக்கும் 3 மொழிகளில் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்தியாவை சேர்ந்தவையாக இருக்க வேண்டும். பல மொழி சார்ந்த கல்வியை வாரியம் படிப்படியாக செயல்படுத்தி வருவதன் தொடர்ச்சியாக 2026-27-ம் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழி கட்டாயமாக்கப்படும் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 2 இந்திய மொழிகளையாவது கற்பது உறுதி செய்யப்படும் என கூறப்பட்டிருக்கிறது.
இந்த நடைமுறையில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படித்துவிட்டு திரும்பும் மாணவர்கள், 8, 9-ம் வகுப்பு வரை தாங்கள் படித்த 3-வது மொழி உள்நாட்டு பள்ளிகளில் கற்பிக்கப்படாமல் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின் படி, அந்த மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம். இருப்பினும் அவர்கள் கல்வித் திட்டத்தில் குறிப்பிடப்பட் டுள்ள மொத்த பாடங்களின் எண்ணிக்கையை முழுமையாக கற்பது கட்டாயம் ஆகும் என சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.இதேபோல், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் இருநிலை தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவது பற்றிய விளக்கத்தையும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.