ஆரோக்யம்

சாப்பிடும்போது அவசரம் வேண்டாம்

வாய் நிறைய உணவை வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக சிறிதளவு வைத்து மென்று சாப்பிடுவது நல்லது.

காலையில் வேலைக்கு செல்லும் பலரும் வேகமாக சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அது இட்லியாக இருந்தால் ஓரிரு நிமிடத்திற்குள் நான்கு, ஐந்து இட்லிகளை சர்வ சாதாரணமாக சாப்பிடுபவர்களும் உண்டு. அப்படி வேகமாக சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல. வழக்கத்தை விட கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் அவசரமாக, வேகமாக சாப்பிடும்போது செரிமானமாகுவதற்கு போதுமான நேரம் உடலுக்கு கிடைப்பதில்லை. அதன் வெளிப்பாடாக வயிறு உப்புசம், அஜீரணம், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகலாம். உடலுக்கும் போதிய சக்தி கிடைக்காது. இதனை தவிர்க்க, சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றினால் போதுமானது.

சாப்பிடும் முன்பு நிதானமாக அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளவேண்டும். கையில் உணவை குறைவாக எடுக்கவேண்டும். அதாவது வாய் நிறைய சாப்பிடுவதற்கு பதிலாக சிறிதளவு சாப்பிடவேண்டும். உணவை விழுங்குவதற்கு முன்பு நன்றாக மெல்லவேண்டும்.

ஒருமுறை வாய்க்குள் உணவை வைத்ததும் உடனே கையில் உணவை எடுக்கவேண்டாம். வாய்க்குள் இருக்கும் உணவை மென்று விழுங்கும்வரை கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். சாப்பிட்ட உணவால் வயிறு நிறைந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்ள மூளைக்கு போதிய நேரம் கொடுக்கவேண்டும்.

அவசரமாக சாப்பிடுவதையும், உணவை மெல்லும்போது பேசுவதையும், சாப்பிடும் நேரத்தில் கைபேசியை பார்ப்பதையும் தவிர்ப்பது நல்லது. உடல் என்பது இயந்திரம் அல்ல, அதை கவனமாக கையாளவேண்டும்.