புதுடெல்லி,
மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட தலைவர்கள் பயணம் செய்வதற்காக ரூ.3,600 கோடியில் அதிநவீன அகஸ்டாவெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு இத்தாலி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது.
இதில் சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றன. இந்த ஊழலில், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத் சகோதரியின் மகன் ரதுல் புரியும் சிக்கினார்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விமான ஊழல் வழக்கிலும், வங்கி கடன் மோசடி வழக்கிலும் ரதுல் புரி கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் ஜாமீன் வழங்க கோரி அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரதுல் புரி ஜாமீன் மனுவிற்கு உரிய பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.