செய்திகள்

பேருந்து கட்டண உயர்வு; சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேச கட்சி போராட்டம்

ஆந்திர பிரதேசத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் பேருந்தில் பயணம் செய்தனர்.

அமராவதி,

ஆந்திர பிரதேச சாலை போக்குவரத்து கழகம் பேருந்து கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்த கட்டண உயர்வால், போக்குவரத்திற்காக பேருந்துகளை நம்பியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவர் என கூறி பா.ஜ.க. மற்றும் தெலுங்கு தேச கட்சிகள் கடும் விமர்சனம் செய்துள்ளன.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். இந்த பேரணி அமராவதி நகரில் சட்டசபை அருகே நடந்தது.

அதேவேளையில், சந்திரபாபு நாயுடுவின் மகன் மற்றும் எம்.எல்.சி.யான, தெலுங்கு தேச கட்சியின் பொது செயலாளர் நர லோகேஷ் மங்களகிரியில் இருந்து பேருந்து ஒன்றில் செயலகம் நோக்கி பிரயாணம் செய்து பேருந்து கட்டண உயர்வுக்கு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.

SCROLL FOR NEXT