காஞ்சீபுரத்தில் மிக பிரபலமாக இருக்கும் நெசவாளி வரதராஜன். இவர் ஒரு சந்தர்ப்பத்தில், இனி தறியே நெய்ய மாட்டேன் என்று சபதம் எடுத்து திடீரென தறி பட்டறையை பூட்டி விடுகிறார். இது அவரது பேரன் சிவாவுக்கு (கதாநாயகன்) தெரியவருகிறது. தாத்தா சபதம் எடுக்க காரணம் என்ன? என்பது மீதி கதை. இந்த கதையின் கிளை கதையாக ஒரு காதலும் இருக்கிறது.
கதாநாயகன் ஹிப் ஹாப் தமிழா ஆதி நன்றாக ஆடுகிறார், பாடுகிறார், கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம், கதாநாயகன் என நிறைய பொறுப்புகளை நம்பிக்கையுடன் சுமந்து இருக்கிறார். இவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார், கதாநாயகி மாதுரி. இருவரும் ஒரே பபிள்காமை சுவைப்பது, இனி காதலர்கள் மத்தியில் பிரபலமாகும். கோஷ்டியாக ஆடும் பாடல் காட்சிகளும், அதை ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா படமாக்கியிருக்கும் விதமும், பளிச். இதேபோல் வசன நடை பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.
நீளமான கதையும், நிறைய கதாபாத்திரங்களும் இருந்தால், படம் ஹிட் என்று நம்பியிருக்கிறார், டைரக்டர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. கதாபாத்திரங்கள் இடையே யார் யாருக்கு என்ன உறவு? என்பதை கண்டுபிடிக்கவே கால் மணி நேரம் ஆகிவிடுகிறது.