செய்திகள்

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தொண்டர்கள் இடையே மோதல்; மேடையில் காலணிகளை கொண்டு தாக்குதல்

மகாராஷ்டிராவில் மந்திரி கலந்து கொண்ட பொது கூட்டத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

ஜல்காவன்,

2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 23ந்தேதி நடைபெறும்.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஜல்காவன் நகரில் மந்திரி கிரிஷ் மகாஜன் தலைமையில் பொது கூட்டம் ஒன்று நடந்தது. இதில் பா.ஜ.க.வின் மூத்த உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திடீரென தொண்டர்களில் இரு குழுவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அவர்கள் மேடை மீது ஏறி ஒருவரை ஒருவர் அடித்து, தாக்கி கொண்டனர். சிலர் தங்களது காலணிகளை கழற்றி அடித்தனர். சிலர் தள்ளி விடப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் உடனடியாக மேடையில் ஏறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினரிடமும் சமரசம் பேசினர். இதன்பின் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.