பூந்தமல்லி,
பூந்தமல்லி பாரிவாக்கத்தை சேர்ந்தவர் சேவன் (வயது 30). வக்கீல். இவர் நேற்று காலை வழக்கு சம்பந்தமாக பூந்தமல்லி கோர்ட்டுக்கு காரில் வந்தார். பின்னர் தனது காரை கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் அந்த காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்தது. திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரின் முன்பகுதியில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் முன்பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணம் மின்கசிவா? அல்லது நாசவேலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.