திருவாரூர்:
திருவாரூரில் இருந்து விருத்தாசலத்திற்கு பொது வினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
பொதுவினியோக திட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்துக்காக பல மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
1,250 டன் அரிசி
அதன்படி நேற்று திருவாரூர் பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து 1,250 டன் சன்னரக அரிசி பொதுவினியோக திட்டத்துக்காக திருவாரூரில் இருந்து விருத்தாசலத்திற்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.