திருவாரூர்:
திருவாரூரில் இருந்து கன்னியாகுமரிக்கு பொது வினியோக திட்டத்திற்காக 1,250 அரிசி டன் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 1000 டன் நெல் அரவைக்காக திருச்சிக்கும் அனுப்பப்பட்டது.
நெல் கொள்முதல்
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை ஆலைக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது.
இந்த அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
1,250 டன் அரிசி
அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டன. பின்னர் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 24 வேகன்களில் ஏற்றினர். அதனை தொடர்ந்து 1,250 டன் அரிசி பொதுவினியோக திட்டத்திற்காக கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
1000 டன் நெல்
இதேபோல் திருவாரூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை பொது வினியோகத்தில் அரிசியாக வழங்க அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அதன்படி நேற்று திருவாரூர் பகுதியில் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 24 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து 1000 டன் நெல் அரவைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.