பழனி,
தூத்துக்குடியில் இருந்து பழனிக்கு நேற்று சரக்கு ரெயில் ஒன்று வந்தது. அதில் தூத்துக் குடி உர நிறுவனத்தில் இருந்து பழனி வேளாண் துறைக்கு 1,288 டன் உர மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. இதில் 724 டன் யூரியா உர மூட்டைகளும், 60 டன் டி.ஏ.பி. உர மூட்டைகளும், 504 டன் கலப்பு உர மூட்டைகளும் இருந்தன.
ரெயிலில் வந்த மூட்டைகள் அனைத்தும் லாரிகள் மூலம் பழனி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், கீரனூர், நெய்க்காரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக பழனிக்கு வந்த உர மூட்டைகளை வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுருளியப்பன் சரிபார்த்தார். பின்னர் எந்தெந்த பகுதிகளுக்கு அவை கொண்டு செல்லப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பழனிக்கு கொண்டுவரப்பட்ட உர மூட்டைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகரிடம் கேட்ட போது, பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றை மானியத்துடன் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம்.
உர மூட்டைகளை வாங்க விரும்பும் விவசாயிகள் வேளாண் அலுவலகங்களுக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகளுக்கு உர மூட்டைகள் வழங்கப்படுவதற்கு முன்பு ஆதார் அட்டை விவரங்கள் சேகரிக்கப்படும். மேலும் அவர்களின் கைரேகையும் பெறப்படும். இதன் மூலம் அவர்களுக்கான மானிய தொகை விவரங்களும் உரத்தின் விலை பட்டியலில் பதியப்படும் என்றார்.