சென்னை புழல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 19-வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. சென்னை வாழ் நாடார்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.செல்வக்குமார் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
விழாவில் முக்கிய விருந்தினர்களாக நெல்லை நாடார் கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.ஆனந்தராஜ், நெல்லை நாடார் கல்வி நிறுவனங்களின் நிர்வாகச் செயலாளர் பி.சந்திரசேகர பாண்டியன், நெல்லை நாடார் கல்வி நிறுவனங்களின் பொருளாளர் கே.ஏ.ரவீந்திரன், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கச் செயலாளர் வி. மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தேசியக் கொடியையும், இந்திய ஒலிம்பிக் கொடியையும், பள்ளிக் கொடியையும் ஏற்றி வைத்தார்கள்.
இந்த விழாவில் சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் டி.தங்கமுத்து, சென்னை வாழ் நாடார் சங்கப் பொருளாளர் கே.எம்.செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக காமராஜ் கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையின் பொருளாளர் ராஜாமணி முருகேசபாண்டியன், சென்னை வாழ் நாடார் சங்க துணைத் தலைவர்கள் ஆர்.பெத்துப்பாண்டியன், ஏ.சித்திரம்பலம், சென்னை வாழ் நாடார்கள் சங்க கல்விக்குழு உறுப்பினர்கள் பி.ஜேம்ஸ், எம்.இந்துநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை ராஜராஜேஸ்வரி வரவேற்று பேசினார். ஸ்ரீ நல்லழகு நாடார் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜான்சிராணி, உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வளையத்தில் நுழைந்து பந்து எடுத்தல், 4×100 மீட்டர் தொடர் ஓட்டம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே நடைபெற்றது.
விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்குத் தங்கப் பதக்கமும், வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தனிநபருக்கான விளையாட்டுப் போட்டிக்கான சாம்பியன்ஷிப்பும் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியைகள் நடனப் போட்டிகளையும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சதிஷ்குமார் இந்த நிகழ்ச்சிக்கான பணிகளை ஒருங்கிணைந்து செய்திருந்தார். இதில் பெற்றோர்கள் மிக ஆர்வமாக பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக பள்ளி முதுகலை தமிழாசிரியை ஜெமி நன்றி கூறினார்.