திருவெறும்பூர்,அக்.26-
திருவெறும்பூர் அருகே விவசாய பணியில் ஈடுபட்டு இருந்த பெண் உள்பட 2 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
விவசாய பணிகள்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் பத்தாளப்பேட்டை ஊராட்சி பகுதியில் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு கடலூர் மாவட்டம் கீழமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பத்தாளப்பேட்டை முனிஆண்டவர்கோவில் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் உள்ள வயலில் கீழமங்கலத்தை சேர்ந்த வேலாயுதம் (வயது 60) என்பவர் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தார். அந்த சமயம் மழை பெய்தபோது, திடீரென்று வேலாயுதம் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பெண் பலி
இதேபோல திருவெறும்பூர் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த ரங்கம்மாள் (45) என்பவர் கிளியூர் பகுதியில் உள்ள சங்கிலிமுத்து என்பவரது வயலில் நடவு பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது, திடீரென்று அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேலாயுதம், ரங்கம்மாள் ஆகியோரின் உடல்களைமீட்டுபிரேதபரிசோதனைக்காக துவாக்குடி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவெறும்பூர் பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்த 2 பேர் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் விவசாயதொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.