சிக்கமகளூரு,
சித்ரதுர்கா டவுனில் 3 வீடுகளில் புகுந்து ரூ.2 லட்சம் நகை-பணத்தை மர்மநபர்கள் திருடி சென்ற இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சித்ரதுர்கா டவுன் பாக்யலட்சுமி படாவனே பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், டி.வி. மற்றும் நகை-பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
இதேபோல, அனுமந்தநகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் ராவ். இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் நகை-பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
மேலும் வித்யாநகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவருடைய வீட்டில் புகுந்த மர்மநபர்கள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவர்கள் 3 பேரும் தனித்தனியாக சித்ரதுர்கா கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் 3 பேரின் வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டனர். அவர்கள் 3 பேரின் வீடுகளிலும் ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.
3 வீடுகளிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதையடுத்து போலீசார், கரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து சித்ரதுர்கா கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.