திரு.வி.க. நகர்,
சென்னை போலீஸ் கமிஷனரகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு தற்போது சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு தனித்தனியாக போலீஸ் கமிஷனர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆவடி கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். அவரது கட்டுப்பாட்டில் 25 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
இந்த நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளிகளான கொரட்டூர் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அப்பன் ராஜ் (வயது 37) மற்றும் விவேக் (30) ஆகிய 2 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அவரது உத்தரவின் பேரில், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல் முறையாக 2 பேர் குண்டர்
சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர், மணலி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பூந்தமல்லி உட்பட 25 போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் குட்கா புகையிலை போதைப் பொருட்கள் விற்பதை தடுக்க அதிரடி சோதனை நடத்தினர். இதில் 16 இடங்களில் பதுக்கி விற்ற சுமார் 200 கிலோ புகையிலை போதைப் பொருட்களை கைப்பற்றிய போலீசார் 17 பேரை கைது செய்தனர்.