நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, திருநின்றவூர் ஆகிய 6 நகராட்சிகளும், ஆரணி, கும்மிடிபூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், பள்ளிப்பட்டு, திருமழிசை, பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை ஆகிய 8 பேரூராட்சிகளும் உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.
201 பேர் வேட்பு மனுதாக்கல்
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மாநகராட்சியில் போட்டியிட 29 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 6 நகராட்சிகளில் போட்டியிட 112 பேரும், 8 பேரூராட்சிகளில் போட்டியிட 60 பேர் என நேற்று ஒரே நாளில் 201 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் மாநகராட்சி பதவிக்கு 40 பேரும், நகராட்சி பகுதியில் போட்டியிட்ட 144 பேரும், பேரூராட்சியில் போட்டியிட 105 பேர் என மொத்தம் 289 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) இறுதி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய மும்முரம் காட்டி வருகிறார்கள்.
அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.