தண்ணீர் வெளியேற்றம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி கடந்த சில நாட்களாக பெய்த பருவமழையின் காரணமாக முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டி உள்ளது. நேற்றைய நிலவரப்படி 2,100 கனஅடி நீர்வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே 2,100 கனஅடியாக தானியங்கி ஷர்ட்டர்கள் மூலமாக வெளியேறுகிறது.
மதுராந்தகம் ஏரி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படவில்லை. இதுதொடர்பாக பொதுமக்களும், விவசாயிகளும் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்து கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் மதுராந்தகம் ஏரி தூர்வாரப்படும் எனறும் அதற்கான நிதி ஒதுக்கவும் உத்தரவை பிறப்பித்தார்.
தடுப்பணைகள் கட்ட வேண்டும்
தற்போது வரை ஏரி தூர்வாரப்பட வில்லை. இதுவரை அதற்கான டெண்டர் விடவும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் கிளியாறு, பாலாறு வழியாக சென்று வீணாக கடலில் கலக்கிறது. ஆகவே பாலற்றின் குறுக்கே அதிக அளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும், தடுப்பணைகளின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.