மாவட்ட செய்திகள்

சென்னையில் ரூ.18½ கோடியில் புதிதாக 23 பூங்காக்கள்: கமிஷனர் ககன்தீப் சிங் பேடி

சென்னையில் ரூ.18½ கோடியில் புதிதாக 23 பூங்காக்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

தினத்தந்தி

ரூ.24.43 கோடி

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 718 பூங்காக்கள் மாநகராட்சியால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும், ஏற்கனவே உள்ள பூங்காக்கள் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் எனவும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 பணிகளுக்கு அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு, ரூ.24.43 கோடி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

23 பூங்காக்கள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக 23 பூங்காக்கள் அமைக்க ரூ.18.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பூங்காக்களை மேம்படுத்த ரூ.5.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், சுற்றுச்சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், கழிவறை மற்றும் குடிநீர் வசதி உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த 28 பூங்கா திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த பணியின் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு பணியாணை வழங்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்