ஜெயங்கொண்டம்,
கள்ளச்சாராயம்
அரியலூர் மாவட்டம் இலையூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறை தினங்களில் விற்பதற்காக மதுபாட்டில்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பரிசோதித்தனர். அப்போது அவர் சாராயத்தை பாட்டிலில் கொண்டு வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் நாகல்குழி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி (வயது 48) என்பது தெரியவந்தது. மேலும், இவர் தனது விவசாய நிலத்தில் சங்கர் (38) மற்றும் செல்லம்மாள் (55) ஆகியோருடன் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து, அவரது விவசாய நிலத்தில் ஊறல் போட்டு வைத்திருந்த 2 பானைகள், 20 லிட்டர் கேன் உள்ளிட்டவைகளை சாராயத்துடன் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தப்பி ஓட்டம்
இதேபோல் நாகமங்கலம் இந்திரா நகரில் பெண் ஒருவர் மது விற்பதாக கிடைத்த தகவலின் படி விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இருப்பினும் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது விற்ற 2 பேர் கைது
உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலையூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (47), சூசையப்பர் பட்டினம் கிராமத்தை சேர்ந்த மரியபிரகாசம் (71) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.