திண்டுக்கல்:
பாலியல் தொல்லை
திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. அங்கு பயின்ற மாணவிகளுக்கு, கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும் 3 மாணவிகள் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் தாளாளர் ஜோதிமுருகன், விடுதி வார்டன் அர்ச்சனா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அர்ச்சனாவை போலீசார் கைது செய்தனர். அதேநேரம் தலைமறைவான தாளாளர் ஜோதிமுருகன், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐகோர்ட்டில் மனு
இதற்கிடையே திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஜோதிமுருகன் நிபந்தனை ஜாமீன் பெற்றார். அதில் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் உடல்நலம் சரியில்லை என்று காரணம் கூறி திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஜோதிமுருகன் கையழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு போராட்டம் நடத்தினர். அதேநேரம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஜோதிமுருகனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கோர்ட்டில் சரண்
இதையடுத்து ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததோடு, 3 நாட்களில் கோர்ட்டில் சரண் அடையும்படி கடந்த மாதம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜோதிமுருகன் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதை தொடர்ந்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் சரண் அடைந்தார். பின்னர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கலெக்டர் விசாகன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
3 மணி நேரம் விசாரணை
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் ஜோதி முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை தொடங்கியது. புகார் கொடுத்த மாணவிகள் தரப்பில் அரசு வக்கீல் கோப்பெருந்தேவியும், எதிர் தரப்பில் வக்கீல் கண்ணப்பனும் ஆஜராகினர்.
இருதரப்பு வக்கீல்களும் ஜோதிமுருகனிடமும், மாணவிகளிடமும் மாறி, மாறி குறுக்குவிசாரணை செய்தனர். சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது. அதன் பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மே) 6-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.