கொடைக்கானல்:
குளுகுளு சீசன்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கெடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இதற்கிடையே தமிழ்ப்புத்தாண்டு, புனிதவெள்ளி, வாரவிடுமுறை என தொடர் விடுமுறையால் கடந்த 3 நாட்களாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கெடைக்கானலுக்கு வருகை தந்தனர்.
இந்தநிலையில் அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்த கூடுதல் போலீசார் ஈடுபட்டனர். இருப்பினும் வனப்பகுதி மற்றும் நகரை ஒட்டிய சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
3 லட்சம் சுற்றுலா பயணிகள்
இதற்கிடையே பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன்மரக்காடு, கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும், வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, தேவதை அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர்.
தொடர் விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறித்து சுற்றுலா துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 4 நாட்களாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். அதன்படி, கடந்த 4 நாட்களில் சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர் என்றார்.
மேலும் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்ததால் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்ததால் நகரில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.