மாவட்ட செய்திகள்

பொத்தேரியில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 4 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி ரெயில் நிலையம் அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்கப்படுவதாக மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்த 4 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது 12 கிராம் எடையுள்ள 100 கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது செய்யூர் பகுதியை சேர்ந்த 18 வயதானவர், பொத்தேரி பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 26), சூர்யா (23), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபா (32), என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் இருந்து 12 கிராம் எடை கொண்ட 100 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.