மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடிய 4 பெண்கள் கைது

கோவில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடிய 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 15 பவுன் நகை மீட்கப்பட்டது.

மதுரை,

மதுரை தல்லாகுளம் அருகே உள்ள நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், வயதான பெண்களை குறிவைத்து 18 பவுன் நகைகள் திருட்டு போன சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் தல்லாகுளம் சரக உதவி கமிஷனர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்த நகை திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, திவ்யா, அமுதா மற்றும் திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்த பிரியா ஆகிய 4 பெண்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பெண்களிடம் இருந்து 15 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தனிப்படை மாநகர போலீஸ் கமிஷனர் வெகுவாக பாராட்டினார்.

SCROLL FOR NEXT