பெங்களூரு:
தனியார் பஸ் கவிழ்ந்தது
துமகூரு மாவட்டம் பாகவடா தாலுகா பலவள்ளி கட்டே அருகே நேற்று முன்தினம் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி மாணவர்கள், சகோதரிகள் உள்பட 6 பேர் பலியாகி இருந்தனர். பஸ் விபத்திற்கு உள்ளாகுவதற்கு டிரைவரின் கவனக்குறைவு, அதிவேகம், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றது உள்ளிட்டவை காரணங்கள் என்று தெரியவந்துள்ளது.
இதுபோன்று டிரைவர்களின் கவனக்குறைவு, பராமரிப்பு இல்லாத வாகனங்களால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு (2021) அதிக அளவு விபத்துகள் நடந்திருப்பதாகவும், உயிர் இழப்பும் அதிகமாக நடந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
9,803 பேர் சாவு
அதன்படி, கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை மாநிலம் முழுவதும் 9,312 பயங்கர விபத்துகளும், 24 ஆயிரத்து 967 சாதாரண விபத்துகளும் நடந்துள்ளது. இந்த விபத்துகளில் 9,803 பேர் தங்களது உயிரை பறி கொடுத்திருக்கிறார்கள். 40 ஆயிரத்து 482 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாநிலத்தில் நடைபெறும் 33 சதவீத விபத்துகள் பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் தான் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். மாவட்ட, தாலுகா, கிராமங்களில் உள்ள சாலைகளில் 50 சதவீத விபத்துகள் நடந்திருப்பதாகவும், தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் விபத்துகளால் தான் அதிக அளவு உயிர் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரைவர்களின் கவனக்குறைவு...
2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால், சாலை விபத்துகளில் 3,639 பேர் உயிர் இழந்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு (2021) கொரோனா பாதிப்பு இருந்தாலும், முழு ஊரடங்கு நீண்ட நாட்கள் இல்லாத காரணத்தால் விபத்துகள் அதிகரித்து, உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் 2 மடங்கு அதிகரிப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
என்றாலும், விபத்துகள் நடப்பதற்கு டிரைவர்களின் கவனக்குறைவு, சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பது, வாகனங்களை சரியாக பராமரிக்காமல் நீண்ட தூரம் பயணம் செய்வதால் அதி பயங்கர விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவது அதிகரித்துள்ளதாக போலீஸ் அதிகாகள் தெரிவித்துள்ளனர்.