சென்னை,
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்பட நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் எனவும், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, இதுவரை திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 2,238 மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் முக கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காத 54 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.