திருப்பூர்,
வீரபாண்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வீரபாண்டி புளியங்காடு பகுதியை சேர்ந்த மணி என்கிற வஞ்சீஸ்வரி மற்றும் அவரது கணவர் சிவசாமி, வஞ்சீஸ்வரியின் சகோதரி பூங்கொடி ஆகியோர் இணைந்து ஸ்ரீஅஸ்வின் சிட்ஸ் என்ற பெயரில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவரிடம் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து பல லட்சம் ரூபாய் வரை சீட்டு பணம் கட்டியுள்ளோம். இந்த நிலையில் சீட்டு முடிவடைந்த நிலையில், கட்டிய பணத்தை திரும்ப கொடுக்கும் படி கேட்டோம்.
அவர் விரைவில் கொடுத்து விடுவதாக தெரிவித்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை நாங்கள் கட்டிய பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறார். மேலும், அவர் தங்கி இருந்த வீட்டை காலி செய்து விட்டு தற்போது வீரபாண்டி மாகாளியம்மன் கோவில் அருகில் துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
ஆனால், தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி எங்களுக்கான பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறார். இது போல பிற பகுதிகளிலும் ஏராளமானோரிடம் இவர் இதுபோல மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.