மாவட்ட செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 1,186 பேர் சிறப்பு ரெயில் மூலம் ஹவுராவுக்கு சென்றனர்

வேலூரில் தங்கியிருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 1,186 பேருடன் காட்பாடியிலிருந்து ஹவுராவுக்கு சிறப்பு ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. 4-வது கட்டமாக அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

காட்பாடி,

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வடமாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஊரடங்கு உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் வேலூரில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளில் தங்கி இருந்தனர்.

தங்களை சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பக் கோரிக்கை வைத்தனர். அதன்படி வேலூரில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் குறித்து வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதன் பின்னர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு 2 கட்டமாகவும், பீகார் மாநிலத்திற்கு நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் சிறப்பு ரெயில் மூலம் 3-வது கட்டமாகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து வேலூரில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 1,186 பேரை 4-வது கட்டமாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வேலூரில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்தவர்கள் அரசு சிறப்பு பஸ்கள் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது .

பின்னர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் சமூக விலகலை கடைபிடித்தபடி காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் சென்று அங்கு 24 பெட்டிகளுடன் தயாராக இருந்த சிறப்பு ரெயிலில் ஏறி அமர்ந்தனர்.

பகல் 12 மணிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் அவர்களை வழியனுப்பி வைத்தனர். அப்போது வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் சிறப்பு ரெயில் காட்பாடியிலிருந்து ஹவுராவுக்கு புறப்பட்டு சென்றது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்