வலங்கைமான்,
புதுச்சேரியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). குருசாமியான இவருடைய தலைமையில் 25 அய்யப்ப பக்தர்கள் புதுச்சேரியில் இருந்து சபரிமலைக்கு வேனில் புறப்பட்டனர். வேனை டிரைவர் தமிழ்வாணன் (30) என்பவர் ஓட்டி சென்றார்.
நேற்று மதியம் வலங்கைமான் அருகே உத்தாணி என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி தனியார் பஸ் வந்தது. அப்போது முந்தி செல்ல முயன்ற போது தனியார் பஸ், வேன் மீது உரசியது. இதனால் நிலைதடுமாறி அருகில் இருந்த வாய்க்காலில் வேன் கவிழ்ந்தது.
25 பேர் காயம்
இதில் 25 அய்யப்ப பக்தர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்கு பிறகு மற்றொரு வேன் மூலம் தொடர்ந்து அவர்கள் அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.