திருவேங்கடம்,
கடையநல்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு ராமர் (வயது 22), லட்சுமணன் என்ற இரட்டை மகன்களும், காவியா என்ற மகளும் உண்டு. ராமர் கோயம்புத்தூரில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் குருவிகுளம் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வள்ளித்தாயை பார்ப்பதற்காக வந்திருந்தார். பின்னர் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
குருவிகுளம் தனியார் தொழிற்பயிற்சி மையம் அருகில் உள்ள வளைவில் திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.