சீர்காழி,
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் தொற்று தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி தலைமையில் பொறியாளர் தமயந்தி, மேலாளர் காதர்கான், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர், சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர்.
இலவச முககவசம்
இதேபோல் சீர்காழி நகர் பகுதிக்குட்பட்ட டீக்கடை, உணவு விடுதி, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், மீன் கடை, கறிக்கடை உள்ளிட்ட கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், நகராட்சி பணியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதேபோல் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை எச்சரித்து இலவசமாக முக கவசங்களை வழங்கினர்.