பெங்களூரு,
நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி நடிப்பில் தமிழில் வெளியான படம் மாரி-2. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் டிரெண்டிங் ஆகி உள்ளது. இந்த பாடலை யூ-டியூப் தளத்தில் 100 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இதையடுத்து நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா பார்த்து பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக நேற்று நடிகை ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் அற்புதமான பாடலை 100 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். யுவன்சங்கர் ராஜாவை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.
ரம்யாவின் இந்த டுவிட்டர் பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. குறிப்பாக கன்னட ரசிகர்கள் ரம்யாவின் டுவிட்டர் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
நடிகை ரம்யாவுக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் கன்னட ரசிகர்கள் செய்த டுவிட்டர் பதிவுகளில், நடிகர் யஷ் நடித்து வெளியான கே.ஜி.எப். படம் பாகிஸ்தான் நாட்டிலும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பற்றியும் பேசலாம். ஆனால் பேசவில்லை. ரெசார்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தாக்கிக்கொண்டதை பற்றி பேசலாம். இதுபற்றியும் கருத்து தெரிவிக்கவில்லை என்ற அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.