வாணாபுரம்,
வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான வாழவச்சனூர், அகரம்பள்ளிபட்டு, பெருந்துறைப்பட்டு, குங்குலியநத்தம், வாணாபுரம், பேராயம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். பெருந்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளனர். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் சொட்டுநீர் பாசனங்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி சார்பில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தை மேம்படுத்தும் வகையில் வேளாண் விஞ்ஞானிகள் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று சொட்டுநீர் பாசன முறையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கு விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
பெருந்துறைப்பட்டில் அரசு வேளாண்மை கல்லூரி இணை பேராசிரியரும், உழவியல் விஞ்ஞானியுமான அன்புமணி, விவசாயிகளிடம் எவ்வாறு சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கு என்னென்ன திட்டங்கள் உள்ளது என்று ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து மண்மாதிரி சேகரித்தல், நீர் தர பரிசோதனை, உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறினார். இதில் கரும்பு பெருக்க அலுவலர் கோவிந்தராஜ், கரும்பு அலுவலர் குபேந்திரன் மற்றும் மாணவமாணவிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.