மாவட்ட செய்திகள்

சேரன்மாதேவி அருகே, பஸ் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு

சேரன்மாதேவி அருகே பஸ் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.

பேட்டை,

விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து சம்பவத்தன்று நெல்லை புதிய பஸ்நிலையத்தை நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. நெல்லையை அடுத்த தருவையை சேர்ந்த அருண்குமார் (வயது 40) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். சேரன்மாதேவி அருகே சங்கன்திரடு விலக்கு பகுதியில் பஸ் வந்தபோது, ரோட்டின் குறுக்கே நாய் ஓடியது.

இதனால் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததில் பஸ் நிலைதடுமாறி ரோட்டின் ஓரம் உள்ள ஓடையில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் கல்லிடைக்குறிச்சி கரந்தை இடக்குடி தெருவை சேர்ந்த கணேசன் மனைவி லதா (47) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் டிரைவர் அருண்குமார், காருகுறிச்சியை சேர்ந்த மகாதேவன் (63) உள்பட 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அவர்களில் அருண்குமார், மகாதேவன் உள்பட 6 பேர் சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் மகாதேவன் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மகாதேவன் நேற்று இறந்தார். இதனால் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT