படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தில் குருவன்மேடு, வடக்குப்பட்டு, பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 196 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு போதிய கழிவறை வசதிகள் உள்ள நிலையில் 100 மாணவர்களுக்கு ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளது.
மேலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாடுவதற்கென போதிய இடம் இல்லாததால் யாரும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவதில்லை. 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு வகுப்பறைகள் பற்றாக்குறையாகவே உள்ளது.
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி கழிவறைகள் அமைக்கவும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.