அம்பர்நாத்,
தானே மாவட்டம் அம்பர்நாத்தை சேர்ந்த வாலிபர் சந்தீப் திவாரி. இவர் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே குறித்து அவதூறு கருத்து தெரிவித்து வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இதை பார்த்து நவநிர்மாண் சேனாவினர் ஆத்திரம் அடைந்தனர். உடனே அவரது வீட்டை கண்டுபிடித்து சென்ற அவர்கள், சந்தீப் திவாரியை பிடித்து அடித்து உதைத்தனர்.
பின்னர் அவரை அங்குள்ள நவநிர்மாண் சேனா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கு வைத்து அவரை 25 முறை தோப்புக்கரணம் போட வைத்தனர். அவரும், தவறுதலாக வீடியோவை வெளியிட்டு விட்டேன், இதற்காக ராஜ்தாக்கரேயிடம் மன்னிப்புக்கேட்டு கொள்கிறேன் எனக் கூறியபடி தோப்புக்கரணம் போட்டார்.
இதுபற்றி நவநிர்மாண் சேனா கட்சி செய்தி தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே கூறுகையில், ஜனநாயகத்தில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது.
ஆனால் அந்த விமர்சனம் கீழ்தரமானதாக இருக்க கூடாது. எங்களது தலைவருக்கு (ராஜ்தாக்கரே) எதிராக தவறான வார்த்தைகளை பயன்படுத்துபவர்கள் நவநிர்மாண் சேனாவினரால் தாக்கப்படுவார்கள், என்றார்.