பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேய நகரை சேர்ந்தவர் முரளி (வயது 26) ஆட்டோ டிரைவர். இவருக்கும் ஆந்திர மாநிலம் வெங்கடகிரியை சேர்ந்த கல்யாணி (22) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லட்சுமி என்ற 2 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில் கல்யாணி தனது பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தார். முரளியின் தந்தை வெங்கடேசுலு ஆட்டோ ஓட்டிக்கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரம் கிராமத்திற்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த முரளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் வெங்கடேசுலுவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.