மாவட்ட செய்திகள்

சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி அயனாவரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உடல் தகுதி பரிசோதனை முகாம்

30-வது சாலை பாதுகாப்பு வாரம் கடந்த 4-ந்தேதி முதல் 10-ந்தேதி (இன்று) வரை கடைபிடிக்கப்படுகிறது.

சென்னை,

சென்னை அயனாவரத்தில் உள்ள மத்திய ஆர்.டி.ஓ. (வட்டார போக்குவரத்து அலுவலகம்) அலுவலகம் சார்பில் கடந்த 5-ந்தேதி மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிவது குறித்தும், கார் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இதேபோல பழகுனர் உரிமம், புதிய ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல், புதிய பதிவுச்சான்று போன்ற பல்வேறு தேவைகளுக்காக கடந்த 7-ந்தேதி அயனாவரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தவர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பாக இலவச உடல் தகுதி பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை சென்னை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) எஸ்.ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 சந்திரசேகர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய பிரசுரங்கள் வழங்கினார்.

வாகனங்களின் புகை மாசை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நேற்று முன்தினம் காவியா புகை பரிசோதனை நிலையத்தில் இலவசமாக புகை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. மேலும் சிவப்பு ஒளி பிரதிபலிக்கும் வர்ணப்பட்டை ஒட்டப்பட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பிரசுரங்கள் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT