மாவட்ட செய்திகள்

கடற்கரை-செங்கல்பட்டு இடையே குறைவான மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் தவிப்பு

கடற்கரை-செங்கல்பட்டு இடையே குறைவான மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டதால் நேற்று பயணிகள் தவிப்படைந்தனர். திடீரென வெளியாகும் அறிவிப்புகளால் தடுமாற்றம் அடைகிறோம் என்று குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.

தினத்தந்தி

சென்னை,
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 15-ந் தேதி (நேற்று) பராமரிப்பு பணி நடைபெறும் என்றும், இதனால் காலை முதல் பிற்பகல் வரை குறைவான அளவிலேயே ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்கனவே குறைந்த அளவில் தான் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். இந்தநிலையில் பராமரிப்பு பணி என்பதால் நிலைமை எப்படி இருக்குமோ? என்று பயணிகள் பரபரப்பு அடைந்தனர். அதனை மெய்ப்பிக்கும் விதமாகவே கடற்கரை-செங்கல்பட்டு இடையே நேற்று ஒரு சில மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

குறிப்பாக நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 7 மின்சார ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதேபோல மறுமார்க்கமாகவும் 5 மின்சார ரெயில்களே இயக்கப்பட்டன. இதனால் சென்னை நகர மின்சார ரெயில் நிலையங்களில் நேற்று பண்டிகை காலத்தை நினைவுபடுத்துவது போல கூட்டம் அலைமோதியது.

அவ்வப்போது வந்த ரெயிலிலும் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். திருவிழா கூட்டம் போல ஆபத்தை உணராமல் ரெயில்களில் இளைஞர்கள் தொங்கிக்கொண்டும் சென்றனர். இதனால் பெண்கள் மற்றும் முதியோர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

பராமரிப்பு பணிக்கான அறிவிப்பு முறையாக தெரியப்படுத்தப்படுவதில்லை என்று பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது.

பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம் தான் என்றாலும், அதுகுறித்து ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். முக்கியமாக சாதாரண வழித்தடங்களில் செல்லும் மின்சார ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்போது, முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். அதைவிடுத்து ரெயில் வருவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பு சொல்வதால் ஓட்டமும், நடையுமாக ரெயிலை பிடிக்க விரைந்து செல்ல வேண்டியது உள்ளது.

இதில் சில நேரம் உடைமைகளை தவறவிடவும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற பதற்றமும் உண்டாகிறது. இதை நீக்க தெற்கு ரெயில்வே சார்பில் உரிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு முன்பாவது (வழித்தடம் உள்பட) ரெயில் மாற்று அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். இது நிறைவேற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு