தாம்பரம்,
தமிழக அரசு சொத்துவரி உயர்த்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளிலும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வேதசுப்பிரமணியன் தலைமையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, தமிழக அரசின் சொத்து வரி உயர்வை வாபஸ் பெறக்கோரி பா.ஜ.க.வினர் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல், சொத்து வரி உயர்வை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில தலைவர் லோகநாதன், மாநில செயலாளர் சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.