மாவட்ட செய்திகள்

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் திண்டிவனம் வாலிபர் கைது

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திண்டிவனத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இந்த அறை தொலைபேசிக்கு நேற்று முன்தினம் இரவு ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது அவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், 10 நிமிடத்தில் வெடித்துவிடும் என்றும் மிரட்டல் விடுத்து விட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

திண்டிவனம் வாலிபர்

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அனைவரும் உஷார் படுத்தப்பட்டனர்.

வெடிகுண்டு தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டது. ஆனால், அந்த நபர் சொன்னபடி 10 நிமிடத்தை கடந்தும் எதுவும் வெடிக்கவில்லை. இதற்கிடையே போனில் பேசிய அந்த நபர் யார்? என்பது குறித்து, செல்போன் எண் மூலம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திண்டிவனம் கிடங்கல்-1 பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் அஜய் (வயது 23) என்பவர் குடிபோதையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

கைது

இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று, அஜயை கைது செய்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும், அவர் மீது திருட்டு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT