திட்டக்குடி,
திட்டக்குடி அருகே கொடிகளம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதுரை. விவசாயி. இவருடைய மகன் விசுவபாரதி (வயது 20). பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான இவர், மோட்டார் சைக்கிளில் இறையூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் அங்கிருந்து கொடிகளம் நோக்கி புறப்பட்டார்.
கொடிகளம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, முன்னால் சென்ற லாரியை விசுவபாரதி முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த அரசு பஸ், விசுவபாரதி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி விசுவபாரதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.