திருப்பூர்,
திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து மனோகரன் பேசுவதாக தொலைபேசி மூலம் நேற்று முன்தினம் அழைப்பு வந்தது. அதில் அக்கவுண்ட் பிரிவுக்கு தொடர்பு கொடுக்கும்படி அந்த நபர் தெரிவித்துள்ளார். அதன்படி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உடனே அவர் உங்கள் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கும். நீங்கள் தயாராக இருங்கள். முன்கூட்டியே பணம் கொடுத்தால் இதனை சரி செய்யலாம் என தெரிவித்துள்ளார். உடனே சம்பந்தப்பட்ட தொழிலதிபர் தனது நண்பருக்கு தெரிவித்து அந்த செல்போன் எண்ணிற்கு மனோகரன் என்பவரிடம் பேசியுள்ளார்.
அப்போது அவர் வருமான வரித்துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகத்தை தொழிலதிபர் தொடர்புகொண்டுள்ளார். இதுபோல் பலர் அழைப்பு விடுத்துள்ளனர். அதே செல்போன் எண்ணில் இருந்து அனைவருக்கும் அழைப்பு செல்கிறது என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இயலாது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோல் அந்த மர்ம நபர் திருப்பூர் பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் உள்பட பலருக்கு அழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வருவதாகக்கூறி மிரட்டல் விடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் திருப்பூர் தொழிலதிபர்கள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.