சென்னை,
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதின் விளைவாக ஏரிகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து, தலைநகர் சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை உருவானது. இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை மக்கள் பெரிதும் நம்பி இருந்தனர்.
அவர்களின் நம்பிக்கையை கெடுக்காத வகையில் மழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 30-ந்தேதி நள்ளிரவு முதல் மறுநாள் இரவு வரை கனமழை பெய்தது.
அந்தவகையில் சென்னை நகர் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. அதேபோல முடிச்சூர், தாம்பரம், மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர், நங்கநல்லூர், துரைப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது.
தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மடிப்பாக்கம் ராம்நகரில் வீடுகளை சூழ்ந்து குளம்போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த முடியாமல் பரிதவிக்கும் மக்கள், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
அந்த பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் மழைநீர் வடியாமல் தெருக்களை சூழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பல குடும்பங்கள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். சிலர் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மழைநீரில் பாம்புகள், அட்டை பூச்சிகள் நடமாட்டமும் இருப்பதால் அச்சத்துடனே அப்பகுதி மக்கள் இருக்கிறார்கள். தெருக்கள் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடைகளுக்கு செல்ல கூட முடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது.
பள்ளிக்கரணையிலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அங்குள்ள காமகோட்டி நகர், காமாட்சி நகரில் குடியிருப்பு பகுதிகளில் குளம்போல மழைநீர் சூழ்ந்து உள்ளது. வீடுகளில் மழைநீர் புகுந்து மக்களை தவிக்க வைத்திருக்கிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. இடுப்பளவு தேங்கிய நீரை கடந்தே மக்கள் எங்கும் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
காமகோட்டி நகரில் உள்ள மாநகராட்சி பூங்கா மழைநீரால் சூழப்பட்டு தீவு போல காட்சியளிக்கிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சிட்லபாக்கம் நேதாஜி நகரிலும் மழைநீர் பிரச்சினையில் குடியிருப்புவாசிகள் பரிதவிக்கிறார்கள். குளம்போல தேங்கியுள்ள மழைநீரில் சிறுவர்-சிறுமிகள் ஆட்டம் போட்டு வருகிறார்கள். மழைநீர் சூழ்ந்ததால் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து உறவினர் வீடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.
பெரும்பாக்கம் அருகே ஏரிநீர் சாலையில் வெள்ளம்போல செல்கிறது. அதில் சிறுவர்கள், இளைஞர்கள் மீன், நண்டு பிடித்து மகிழ்ச்சி அடைகின்றனர். பெரும்பாக்கம் பிரதான சாலையில் வெள்ளம் பால மழைநீர் செல்வதால் அங்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சிலரது எச்சரிக்கையை மீறி சென்ற வாகன ஓட்டிகளும் ஒருகட்டத்தில் மழைநீரில் பரிதவித்த காட்சியை பார்க்க முடிந்தது.
இதேபோல ஆதம்பாக்கம், நங்கநல்லூர், புழுதிவாக்கம், கோவிலம்பாக்கம் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.