கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றியம் எமக்கலாபுரம் ஊராட்சி கைலாசம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடும் வறட்சி காரணமாக தற்போது ஆழ்துளை கிணற்றில் குறைந்தளவே தண்ணீர் இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அதுவும் முறையாக வருவதில்லை என்று கிராமமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையொட்டி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.5 விலைக்கு வாங்குகின்றனர். தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து சாணார்பட்டி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபா ராஜமாணிக்கம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தவும், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.